தமிழில் விஜய்யை வைத்து தொடர்ந்து பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் அட்லீ, அதன் பின்னர் இந்தி திரையுலகில் ‘ஜவான்’ திரைப்படத்தை இயக்கினார். ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான அந்த படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து மாபெரும் சாதனை படைத்தது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, அட்லீ தற்போது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை கதாநாயகனாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘ஏஏ22xஏ6 (AA22XA6)’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில் கதாநாயகியாக நடிகை தீபிகா படுகோன் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் அட்லீ, நடிகை தீபிகா படுகோன் குறித்து மனமார்ந்த புகழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் பேசுகையில்,
“தீபிகா படுகோன் என் அதிர்ஷ்ட நடிகை. தீபிகாவுடன் நான் இணையும் இது இரண்டாவது படம். அவருடன் பணியாற்றுவது உண்மையிலேயே ஒரு அற்புதமான அனுபவம். இந்த திரைப்படத்தில் ரசிகர்கள் தீபிகா படுகோனின் முற்றிலும் புதிய முகத்தையும், வேறுபட்ட நடிப்பையும் காண்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
