தமிழகத்தில் மக்களால் மிகுந்த உற்சாகத்துடன், பல நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகையாக பொங்கல் பண்டிகை விளங்குகிறது. இந்த விழா காலத்தில் அனைத்து வீடுகளிலும் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் மரபுகளை நினைவூட்டும் வகையில் பொங்கலை சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்தச் சூழலில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தமிழர்களின் பாரம்பரியம் மாறாமல் பொங்கல் விழாவை கொண்டாடி வருகிறார். ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் இந்த விழாவில், அரசியல் மற்றும் சமூகத் துறையைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு எல். முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
இந்த விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். அதேபோல், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட ‘பராசக்தி’ திரைப்படக் குழுவினரும் இந்த பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் ஜிவி பிரகாஷ் திருவாசகம் பாடி அனைவரையும் அந்நிகழ்ச்சியில் கவர்ந்தார்
