தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், தற்போது ஆந்திர மாநில அரசின் துணை முதல்வராகவும் உள்ள பவன் கல்யாண், அரசியல் பொறுப்புகளுடன் சேர்ந்து இன்னும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவரது படங்களில் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்ப்பது விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளே ஆகும். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், பவன் கல்யாணும் தனது ஒவ்வொரு படத்திலும் அதிரடி காட்சிகளுக்கு தனி முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
சினிமாவில் நடிப்பதற்கு முன்பே, குறிப்பாக அவர் சென்னையில் வாழ்ந்த காலகட்டத்திலேயே, கராத்தே, குங்பூ உள்ளிட்ட பல்வேறு தற்காப்பு கலைகளை முறையாக பயிற்சி பெற்று கற்றுக்கொண்டுள்ளார். அந்த காலத்தில் தான் அவர் பிரசித்தி பெற்ற ஜப்பானிய வாள் சண்டை கலையையும் ஆழமாக பயின்றுள்ளார். இந்த தற்காப்புக் கலைகளில் அவர் காட்டிய தொடர்ச்சியான ஆர்வமும், நீண்ட கால அர்ப்பணிப்பும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருந்தது.
இந்தக் கலையில் அவர் வெளிப்படுத்திய ஒழுங்கு மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில், சோகோ பூ கன்ட்ரி கை என்ற ஜப்பானிய அமைப்பு பவன் கல்யாணுக்கு இந்த கலைக்கான ஐந்தாவது டான் (5th Dan) என்ற உயரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. தெலுங்கு திரை உலகில் இருந்து இவ்வளவு பெரிய மரியாதையை பெறும் முதல் நடிகர் பவன் கல்யாண் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதோடு மட்டுமல்லாமல், கோல்டன் டிராகன் ஆர்கனைசேஷன் அமைப்பும் அவருக்கு ‘டைகர் ஆஃப் மார்ஷியல் ஆர்ட்ஸ்’ என்ற சிறப்பு பட்டத்தை வழங்கி கவுரவித்துள்ளது.
