சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம், எங்கும் பிரமாண்ட வரவேற்பை பெற்றுவருகிறது. படத்தின் வலுவான கதைக்களம், சமூக கருத்துகளை முன்வைக்கும் விதம், நடிகர்களின் இயல்பான மற்றும் அழுத்தமான நடிப்பு என அனைத்துமே பாராட்டுகளை குவித்து வருகிறது. இந்த நிலையில், இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நடிகர் ரவி மோகன் தனது ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
‘பராசக்தி’ திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் வெளிப்படுத்திய அன்பும் ஆதரவும் தனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளதாக ரவி மோகன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தற்போது நான் பல நல்ல உணர்வுகளை அனுபவித்து வருகிறேன். பராசக்தி திரைப்படத்தில் ‘திரு’ என்ற கதாபாத்திரத்திற்கு நீங்கள் வழங்கிய அன்பும் ஆதரவும் காரணமாகவே இது சாத்தியமானது. உங்களையெல்லாம் மீண்டும் புதிய புதிய படங்களுடன் மிக விரைவில் சந்திக்க வருகிறேன். 2026 ஆம் ஆண்டு உங்களுக்கெல்லாம் மிகச் சிறப்பானதாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
‘பராசக்தி’ திரைப்படம் பெற்றுள்ள இந்த வெற்றி, நடிகர் ரவி மோகனின் திரையுலகப் பயணத்தில் இன்னொரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த படம் அவரது நடிப்புத் திறனை மீண்டும் ஒரு முறை உறுதி செய்துள்ளதாகவும், எதிர்காலத்தில் அவர் தேர்வு செய்யவுள்ள புதிய கதாபாத்திரங்கள் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
