‘கிஷ்கிந்தா காண்டம்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் தின்ஜித் அய்யாதன் இயக்கத்தில் உருவான படம் ‘எகோ’. இந்த திரைப்படத்தில் ‘படக்கலம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் சந்தீப் பிரதீப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன், அசோகன், பியானா மோமின், என்.ஜி. ஹங் ஷென், சிம் ஸி பீ, சாஹிர் முகமது, ரஞ்சித் சேகர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
‘எகோ’ திரைப்படம் கடந்த ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியாகியது. வெளியான உடனே, கதைக்களம் மற்றும் நடிப்புக்காக ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 31ஆம் தேதி இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது. ஓடிடி வெளியீட்டிற்குப் பிறகும் படத்திற்கு நல்ல கவனம் கிடைத்தது.
இந்நிலையில், ‘எகோ’ திரைப்படத்தை பாராட்டி நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மலையாள திரைப்படமான ‘எகோ’ ஒரு தலைசிறந்த படைப்பு. அனைத்து உயரிய பாராட்டுகளுக்கும் தகுதியானவர் நடிகை பியானா மோமின். அவர் இந்த படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார். தனுஷின் இந்த பாராட்டு, படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
