தமிழில் ‘குட்டிப் புலி’, ‘கொம்பன்’, ‘மருது’, ‘விருமன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் முத்தையா. கிராமத்து பின்னணியுடன் கூடிய கதைக்களங்கள், வலுவான கதாபாத்திரங்கள் ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து கவனம் ஈர்த்து வந்த முத்தையா, ரசிகர்களிடையே ஒரு தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியிருந்தார்.
முத்தையா கடைசியாக இயக்கிய ‘ராம்போ’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாமல் போனது. இதன் பின்னர், முத்தையா அடுத்ததாக எந்த நடிகருடன் படம் இயக்கப் போகிறார் என்ற தகவல் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது, அவர் நடிகர் அருண் விஜய்யை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதத்தில் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து முடித்த பிறகு, நடிகர் அருண் விஜய் பத்திரிகையாளர்களிடம் இதனை பகிர்ந்து கொண்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, முத்தையா – அருண் விஜய் கூட்டணி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
