கடந்த 2016ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘தெறி’. இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று, வெற்றிப் படமாக அமைந்தது. இதன் மூலம் தான் விஜய் – அட்லி கூட்டணி முதன்முறையாக உருவானது. அதன் பின்னர், ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய படங்கள் மூலம் இந்த கூட்டணி தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தது.
‘தெறி’ திரைப்படம் திரைக்கு வந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், இந்த படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் எஸ்.தாணு திட்டமிட்டிருந்தார். இதற்கிடையே, விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை சான்றிதழ் பிரச்னை காரணமாக வெளியீடு தள்ளிப்போனது. இதனைத் தொடர்ந்து, ‘தெறி’ படத்தை பொங்கல் தினமான ஜனவரி 15ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக தயாரிப்பாளர் தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஆனால், தற்போது திடீரென ‘தெறி’ படத்தின் ரீ-ரிலீஸும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தாணு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், வரவிருக்கும் புதிய படங்களின் தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், ‘தெறி’ ரீ-ரிலீஸ் தள்ளிவைக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
