சூர்யா மற்றும் மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாக உள்ளது. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சமீபத்திய பேட்டியில் படம் குறித்து பேசிய வெங்கி அட்லூரி, திரைக்கதை உருவாக்கத்தில் எடுத்த உழைப்பை பகிர்ந்தார். “ஒவ்வொரு காட்சியும் சரியாக அமைய வேண்டும் என்பதற்காக பலமுறை திருத்தினேன். சில காட்சிகளை ஒன்பது விதமாக எழுதிப் பார்த்தேன். கதையின் உணர்வு பாதிக்காமல் இருக்கவே அவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டேன்,” என்றார்.
மேலும், படத்திற்காக ஒரே ஒரு கிளைமாக்ஸ் அல்ல, மூன்று வெவ்வேறு முடிவுகளை தயார் செய்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அவற்றில் எந்த முடிவு படத்துக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை சூர்யாவிடம் கேட்டதாகவும் கூறினார்.இறுதியாக, அந்த மூன்று கிளைமாக்ஸ்களில் ஒன்றை சூர்யாவே தேர்வு செய்ததாக வெங்கி அட்லூரி தெரிவித்தார். இந்த தகவல் ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.
