‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடித்துள்ள புதிய திரைப்படம் ‘வா வாத்தியார்’. இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
‘வா வாத்தியார்’ திரைப்படம் கடந்த மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தயாரிப்பாளர் சந்தித்த நிதி தொடர்பான வழக்கு காரணமாக படம் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் வெளியீடு குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்நிலையில், கார்த்தியின் ‘வா வாத்தியார்’ திரைப்படம் வருகிற 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து நேர்காணலில் பேசிய இயக்குநர் நலன் குமாரசாமி, “வா வாத்தியார் என் முந்தைய படங்களைப் போல பாராட்டுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட படம் அல்ல. அதே நேரத்தில், என் முயற்சிகளை வேறொரு வழியில் செலுத்தியிருப்பதால், பார்வையாளர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்காத படமாக இது இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
