சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு மத்திய திரைப்படத் தணிக்கை குழு மொத்தமாக 25 மாற்றங்களை செய்ய உத்தரவிட்டு, U/A 16+ சான்றிதழ் வழங்கியுள்ளது. தணிக்கை குழு அறிவுறுத்திய மாற்றங்களின் படி, ‘தீ பரவட்டும்’ என்ற காட்சி ‘நீதி பரவட்டும்’ என மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், ‘இந்தி அரக்கி’ என்ற வசனம் ‘அரக்கி’ என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ‘இந்தி என் கனவை அழித்தது’ என்ற வசனம் ‘என் ஒரே கனவை இந்தி திணிப்பு எரித்தது’ என மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டதையடுத்து, ‘பராசக்தி’ திரைப்படத்திற்கான டிக்கெட் விற்பனை உடனடியாக விறுவிறுப்பாக தொடங்கியது. தமிழகமெங்கும் அதிகமான திரையரங்குகளில் இந்த படம் ஒரே நேரத்தில் வெளியானது, ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பும் மற்றும் உற்சாகம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், தற்போது ‘பராசக்தி’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் பல இடங்களில் தொடங்கியுள்ளன. ரசிகர்கள் ஆர்வமுடன் திரையரங்குகளுக்கு நேரில் சென்று படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். முதல் நாள் முதல் காட்சியிலிருந்தே ரசிகர்களின் ஆதரவு அதிகரித்து வருவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
