விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தெறி. அட்லி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் எமி ஜாக்சன் மற்றும் சமந்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இதில் விஜய் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தது ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றது.
வெளியானதிலிருந்தே தெறி படம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. அதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் பெரிய சாதனையை படைத்தது. இதன் தொடர்ச்சியாக, இந்த படம் இந்தி மொழியிலும் பேபி ஜான் என்ற பெயரில், வருண் தவான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானது. இந்நிலையில், தமிழில் தெறி திரைப்படம் மீண்டும் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அதிகாரப்பூர்வ போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படாத காரணத்தால், அந்த படம் திட்டமிட்டபடி ஜனவரி 9 அன்று வெளியாவாதது ரசிகர்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தியது. இந்த சூழ்நிலையில் தெறி ரீரிலீஸ் குறித்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு ஓர் ஆறுதலாக அமைந்துள்ளது. குறிப்பாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெறி மீண்டும் வெளியானால் மிகச் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
