மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள ‘மன சங்கர வர பிரசாத் காரு’ திரைப்படம், வரவிருக்கும் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில், நடிகர் வெங்கடேஷ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றமாக நடித்துள்ளார். இதன் மூலம், சிரஞ்சீவி மற்றும் வெங்கடேஷ் இருவரும் முதன்முறையாக ஒரே திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் மெகா புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஹைதராபாத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிரஞ்சீவி, நடிகர் வெங்கடேஷ் குறித்து பேசும்போது, “இந்த படத்தில் வெங்கடேஷுடன் இணைந்து பணியாற்றியது, மீண்டும் பள்ளிக்கூட நாட்களுக்கு திரும்பியது போல மிகுந்த சிரிப்பும் கலகலப்பும் நிறைந்த அனுபவமாக இருந்தது. வெங்கடேஷ் எப்போதுமே தனது தொழில்முறை வாழ்க்கையையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் சிறப்பாக சமநிலைப்படுத்தி வருபவர். அவர் என்னிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் போது, அவருடைய வயதைவிட அதிகமான அனுபவ அறிவும், வாழ்க்கை பற்றிய புரிதலும் எனக்கு தெளிவாக தெரிந்தது. சில சமயங்களில் அவரை என்னுடைய நவீன கால குருவாகவே நினைத்ததும் உண்டு என்று மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்தார்.
மேலும், இப்படத்தின் இயக்குனர் அனில் ரவிபுடியிடம் சிரஞ்சீவி பேசுகையில், “எதிர்காலத்தில் நாங்கள் இருவரும் முழு படத்திலும் ஒன்றாக நடிக்கக்கூடிய வகையில் ஒரு வலுவான கதையை தயார் செய்யுங்கள்” என ஒரு கோரிக்கையையும் வைத்தார். இதனால், சிரஞ்சீவி – வெங்கடேஷ் கூட்டணி மீண்டும் ஒரு முழுநீள திரைப்படத்தில் இணையுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
