தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை சார்பில், ‘உலகம் உங்கள் கையில்’ என்ற தலைப்பில், மாணவ–மாணவிகளுக்கு 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் மாபெரும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி உரையாற்றினார்.

அவர் பேசுகையில், எதிர்கால தலைமுறைகளுக்கு வேறு எந்த பொருளையும் வழங்குவதைக் காட்டிலும் கல்வியை வழங்குவது மிக முக்கியமானது என்றும், ஒருவருக்கு கல்வி கிடைப்பதன் மூலம் அந்த நபர் மட்டுமல்லாமல் அவரது குடும்பமும், அடுத்த தலைமுறையும் வளர்ச்சி பாதையில் முன்னேறி செல்லும் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஒரு மனிதனின் வளர்ச்சி என்பது அவனுக்கு கிடைக்கும் அறிவின் அடிப்படையிலேயே அமைகிறது என்றும், கல்வி மூலம் தான் ஒருவரால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்றும் அவர் கூறினார். இந்த கல்வி வளர்ச்சிப் பாதையில் எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றை உடைத்தெறிந்து முன்னோக்கி நகர்த்திச் செல்லும் முயற்சியில் தமிழக முதலமைச்சர் முக்கிய பங்கு வகித்து வருகிறார் என்றும், அதற்காக தனிப்பட்ட முறையில் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் விஜய் சேதுபதி குறிப்பிட்டார். இந்த திட்டத்தின் மூலம் பலன் அடையும் அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு உரையை நிறைவு செய்தார்.
