சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகையும், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியுமான குஷ்பு கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அந்த சந்திப்பின்போது, த.வெ.க. தலைவர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் விரிவாக பதிலளித்தார்.

அதில் அவர் கூறியதாவது, விஜய்யை தாம் சக நடிகர் என்று ஒருபோதும் அழைப்பதில்லை என்றும், அவரை தனக்கு தம்பி போன்றவர் என்றே நினைப்பதாகவும் தெரிவித்தார். அதேபோல் விஜய்யும் தன்னை அக்கா என்றுதான் அழைப்பார் என்றும், அவர்களுக்கிடையேயான அந்த அன்பான உறவு நீண்ட காலமாக தொடர்வதாகவும் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், ‘ஜனநாயகன்’ படம் விஜய்யின் கடைசி திரைப்படம் என்று சொல்லப்பட்டபோது, தனக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டதாகவும், தான் விஜய்யின் பெரிய ரசிகை என்பதால் அந்த செய்தி மனதளவில் அதிர்ச்சியை கொடுத்ததாகவும் தெரிவித்தார். விஜய்யின் நடனத் திறமை, ஆக்ஷன் காட்சிகள் ஆகியவை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அவரது சினிமா பயணம் இங்கு முடிவடைவது வருத்தமளித்தாலும், அவர் ஒரு புதிய அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள நிலையில் அதற்காக முழு மனதுடன் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் குஷ்பு கூறினார்.
