இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு ‘அரசன்’ என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் புரோமோ வீடியோ, ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.

வடசென்னை கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில், சமுத்திரகனி, கிஷோர், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, மதுரையைத் தொடர்ந்து தற்போது கோவில்பட்டியில் மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, “அரசன் திரைப்படம் மிகவும் சிறப்பாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இயக்குநர் வெற்றிமாறன் என்னை அழைத்து, நடிகர் சிலம்பரசன் கேரவேனுக்குச் செல்லாமல், முழு நேரமும் படப்பிடிப்பு தளத்திலேயே இருந்து அனைவருடனும் நல்ல நட்புடன் பழகுகிறார் என்று தெரிவித்தார். அதை கேட்கும் போதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. வடசென்னை உலகத்துடன் தொடர்புடைய கதையாக இருந்தாலும், நடிகர் தனுஷ் சிறையில் இருக்கும் காலகட்டத்தில் அரசனின் கதை நடைபெறுகிறது. இந்த படத்தில் இடம்பெறும் விஜய் சேதுபதியின் காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கும் வகையில் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
