அருண்குமார் சேகரன் மற்றும் நதியா சோமு நடித்துள்ள ‘ப்ராமிஸ்’ திரைப்படத்தை அருண்குமார் சேகரனே இயக்கியுள்ளார். மனித வாழ்க்கையில் உண்மை மற்றும் சத்தியம் எவ்வாறு சோதிக்கப்படுகின்றன என்பதையே மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வேலூர், ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட வடதமிழக பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குநர் சேரனும் நடிகர் நட்டியும் வெளியிட்டனர். மேலும், படத்திற்கு பின்னணிக் குரல் வழங்கிய தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ். பாஸ்கர், இந்த பட காட்சிகளை பார்த்து நெகிழ்ச்சியடைந்து பாராட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஜூன் 26ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படம், மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’ சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். சத்தியம், உண்மை, அறம் ஆகியவை மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தையும், அவற்றின் மதிப்பையும் எடுத்துரைக்கும் படைப்பாக ‘ப்ராமிஸ்’ உருவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
