அருள்நிதி நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி’. இந்த படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவான இந்த திரைப்படம், வெளியான நேரத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக, கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ‘டிமான்ட்டி காலனி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி கவனம் பெற்றது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த இரண்டாம் பாகமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது, இந்த வரிசையின் மூன்றாம் பாகமான ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இந்த படம் வரும் கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது ‘டிமான்ட்டி காலனி 3’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
