தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ஜீவா, சமீபத்தில் நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ள ஜீவாவுக்கு தற்போது தொடர்ந்து புதிய பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அந்த வகையில், தற்போது ‘பிளாக்’ பட இயக்குநர் இயக்கும் திரைப்படம் மற்றும் ராஜேஷ் எம் இயக்கத்தில் உருவாகும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ ஆகிய இரண்டு படங்களை தனது கைவசம் வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஜீவா நடிக்கும் புதிய திரைப்படத்தை ‘கிடா’ படத்தின் இயக்குநர் ரா.வெங்கட் இயக்கவுள்ளார். கடந்த ஆண்டு வெளியான ‘கிடா’ திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை என்றாலும், அதன் கதைக்களம் மற்றும் உருவாக்கத்திற்காக விமர்சகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுகளை பெற்றது. தற்போது ரா.வெங்கட் இயக்கும் இந்த புதிய படத்தை, ‘கருடன்’ மற்றும் ‘மாமன்’ ஆகிய திரைப்படங்களை தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
மேலும், இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சுகுமார் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள உள்ளார். கிராமப்புற பின்னணியை கொண்ட கதைக்களமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜீவா நடிப்பில் உருவாகும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியுள்ளது. இதற்கான படப்பிடிப்பு தொடக்க விழா மேலூரில் உள்ள கருப்பசாமி கோவிலில் சிறப்பு பூஜையுடன் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தின் பணிகளை தொடங்கியுள்ளனர்.
—
