நடிகை ருக்மணி வசந்த் கன்னட சினிமாவின் மூலம் அறிமுகமாகி, பின்னர் தமிழில் ‘ஏஸ்’, ‘மதராஸி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்பு, ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் ருக்மணி வசந்த் நடித்தது பெரும் கவனத்தை பெற்றது. அந்த படத்தில் அவரது நடிப்பு பலரையும் கவர்ந்த நிலையில், இந்த படத்திற்கு பிறகு அவர் பான் இந்தியா அளவில் கவனிக்கப்படும் நடிகையாக மாறியுள்ளார்.

தற்போது அவர் ‘டாக்சிக்’ மற்றும் என்டிஆர் நடிக்கும் புதிய படம் ஆகியவற்றில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனரான சுகுமார் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கவுள்ள அவரது 17வது படத்தில் கதாநாயகியாக நடிக்க ருக்மணி வசந்த் ஒப்பந்தமாகியுள்ளதாக தெலுங்கு திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அவர் நடித்து வரும் இந்த மூன்று படங்களும் பான் இந்தியா அளவில் தயாராகி வருகின்றன. அதேபோல் இந்தி பட வாய்ப்புகள் தற்போது அவருக்கு தொடர்ந்து வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், ருக்மணி வசந்த் பான் இந்தியா மார்க்கெட்டில் இன்னும் அதிகமான புகழ் மற்றும் அடையாளத்தை பெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
