தமிழில் ‘பிரியமுடன்’, ‘இரணியன்’, ‘யூத்’, ‘ஜித்தன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வின்சென்ட் செல்வா. இதனைத் தொடர்ந்து, அவரது இயக்கத்தில் வெளியான ‘ஜித்தன் 2’, ‘தோட்டா’, ‘இங்கு என்ன சொல்லுது’ போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தோல்வியை சந்தித்தன. இதன் காரணமாக, சில காலமாக அவர் திரைப்பட இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்தார். ‘யூத்’ படம் உருவான காலகட்டத்தில், வின்சென்ட் செல்வாவிடம் இயக்குனர் மிஷ்கின் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வின்சென்ட் செல்வா மீண்டும் இயக்குனராக களமிறங்க உள்ளார். இதற்கான முன் தயாரிப்பு பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்த புதிய படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க மிஷ்கினை படக்குழு அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது குருநாதருக்கு நன்றி கடன் செலுத்த வேண்டிய தருணமாக இதை கருதிய மிஷ்கின், இந்த படத்தில் சம்பளம் ஏதும் பெறாமல் நடித்துத் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
