நாகாலாந்து மாநிலத்தின் தலைநகரான கோஹிமாவில், ‘நாகா சர்வதேச ஸ்டுடியோ’ என்ற பெயரில் சர்வதேச தரத்தில் பிரம்மாண்டமான ஸ்டுடியோ அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை நாகாலாந்து முதல்-மந்திரி நெய்பியு ரியோ மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நேற்று இணைந்து வெளியிட்டனர். ஏ.ஆர்.ரகுமானின் கருத்துருவாக்கத்தில் உருவாகும் இந்த ஸ்டுடியோவில், அதிநவீன ஒலிப்பதிவு வசதிகள், கலைநிகழ்ச்சி அரங்குகள் மற்றும் இசைப்பணிகளுக்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறுகையில், “நாகாலாந்து தனித்துவமும் நேர்மையும் கொண்ட, கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றிய அரிய இசை ஆன்மாவைக் கொண்டது. அந்த பாரம்பரியம், உலகத் தரமான படைப்பாற்றலுடன் இணையும் இடமாக ‘நாகா சர்வதேச ஸ்டுடியோ’ அமையும்.
இந்த ஸ்டுடியோ, இப்பகுதியைச் சேர்ந்த இளம் கலைஞர்கள் ஒன்றிணைந்து புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும், தேசிய அளவிலும் உலக அளவிலும் ஒலிக்கக்கூடிய இசையை உருவாக்கவும் வாய்ப்பளிக்கும். இந்த கனவை நனவாக்க உதவிய நாகாலாந்து முதல்-மந்திரி நெய்பியு ரியோ, நாகாலாந்து அரசு மற்றும் TAFMA அமைப்புகளுக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
‘நாகா சர்வதேச ஸ்டுடியோ’வின் வடிவமைப்பை ப்ளூக்யூப் ஆர்கிடெக்ட்ஸ் மற்றும் ரியாஸ்தீன் ரியான் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். இந்த திட்டம் டாஸ்க் போர்ஸ் பார் மியூசிக் & ஆர்ட்ஸ் (TAFMA) மற்றும் நாகாலாந்து முதலீடு மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IDAN) ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
