ரூபா ஐயர் இயக்கி தயாரித்துள்ள ‘ஆசாத் பாரத்’ திரைப்படத்தில் ஸ்ரேயாஸ் தல்பே, ரூபா ஐயர், சுரேஷ் ஓபராய், இந்திரா திவாரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரின் வாழ்க்கை, அவரது சித்தாந்தங்கள் மற்றும் போராட்டப் பாதையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படம் குறித்து நடிகை இந்திரா திவாரி பேசுகையில், இந்த கதையை முதன்முதலில் கேட்டபோதே அது தனது உள்ளத்தை ஆழமாகத் தாக்கியதாக கூறினார். சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதைகள் வெறும் வரலாற்றுப் பாடங்களில் மட்டுமே அடங்கியவை அல்ல என்றும், அவர்களின் அளவற்ற தியாகம், துணிச்சல் மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றின் பயணங்களை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார். இந்த கதை தன்னை உணர்ச்சிப்பூர்வமாக மிகவும் நெகிழ வைத்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், இந்த படம் சுதந்திரத்தை மிகைப்படுத்தி காட்டாமல், அதற்காக மக்கள் செலுத்திய பெரும் விலையை நேர்மையாக சித்தரிக்கிறது என்றும், இன்றைய காலத்தில் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படும் பல மதிப்புகளை பார்வையாளர்களுக்கு நினைவூட்டும் என்றும் கூறினார். இப்படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் என்றும், அந்த காலகட்ட சமூகச் சூழல், மக்கள் எப்படி வாழ்ந்தார்கள், பேசினார்கள், பயந்தார்கள், நம்பினார்கள் என்பதை உணர்ந்து முழுமையாக அதில் ஈடுபட்டு நடித்ததாகவும் அவர் விளக்கினார்.
