தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்கிறார் லோகேஷ் கனகராஜ். அவருடைய முதல் படமான ‘மாநகரம்’ படத்திற்கு ஜாவேத் ரியாஸ் இசையமைத்திருந்தார். இரண்டாவது படமான ‘கைதி’ படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருந்தார். இந்த இரண்டு படங்களிலும் பின்னணி இசைக்கு சிறந்த விமர்சனங்கள் கிடைத்தன. அதன் பிறகு லோகேஷ் இயக்கிய ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’, ‘கூலி’ ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைத்தார். இந்த படங்களின் பின்னணி இசைக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “எதிர்காலத்தில் அனிருத் இல்லாமல் நான் படங்களை இயக்க மாட்டேன். அவர் திரையுலகை விட்டு வெளியேறினால் மட்டுமே வேறு யாரை இசையமைப்பாளராக தேர்வு செய்வேன். எனது படங்களுக்கு ‘ஏஐ’ இசை தேவையில்லை. ஏனெனில் எனக்கு அனிருத் இருக்கிறார்,” என்று தெரிவித்துள்ளார்.
இதனால், லோகேஷ் அடுத்து இயக்கும் ‘கைதி 2’ படத்திற்கு அனிருத் இசையமைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு சாம் சிஎஸ் அளித்த ஒரு பேட்டியில், “லோகேஷ் கனகராஜ் என்னை அழைத்திருந்தார். ‘கைதி 2’ படத்தில் நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவோம் என்று கூறினார்,” என்று தெரிவித்தார். இப்போது லோகேஷ், எதிர்காலத்தில் அனிருத் இல்லாமல் படம் எடுக்க மாட்டேன் என கூறியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.