சூர்யா – ஜோதிகாவின் திருமண வாழ்க்கை இரண்டு தசாப்தங்களை கடந்துள்ள நிலையில், இருவரும் தங்களது உறவை மீண்டும் ஒருமுறை கொண்டாடியுள்ளனர். 2006-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த நட்சத்திர தம்பதி, தற்போது 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்கள். இதையொட்டி, தங்களது திருமண உறுதிமொழிகளை புதுப்பித்துக் கொண்டுள்ளனர்.
இந்த தருணத்தைப் பற்றி ஜோதிகா பகிர்ந்துள்ள பதிவு, அவர்களின் நீண்டகால பயணத்தை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்துகிறது. 20 ஆண்டுகளில் இருந்த காதல் தருணங்களை மட்டும் கொண்டாடுவதற்கான நிகழ்வு இது அல்ல என்றும், தங்களுக்குள் ஏற்பட்ட சண்டைகள், குறைகள், விட்டுக்கொடுத்தல்கள், புரிதல்கள் மற்றும் செய்த தியாகங்களையும் ஏற்றுக்கொண்டு கொண்டாடும் தருணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒருவரை ஒருவர் எந்தவித சுயநலமும் இல்லாமல் நேசித்ததையும், வாழ்க்கையில் ஒருவருக்காக ஒருவர் மாறிக்கொண்டதையும் இந்த உறுதிமொழி பிரதிபலிப்பதாக ஜோதிகா கூறியுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவுடன், தங்களது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் தொடங்கியிருப்பதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஒருகாலத்தில் நிஜமாகும் என்று நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு தொலைவில் இருந்த ஒரு கனவு, தற்போது தனது வாழ்நாள் முழுவதும் ரசித்து வாழும் நிஜமாக மாறியிருப்பதாக குறிப்பிட்ட ஜோதிகா, “என்ன ஒரு முரண்?” என்றும் பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, சூர்யாவுடன் இணைந்து தனது திருமண வாழ்க்கைக்கான புதிய உறுதிமொழிகளையும் அவர் பகிர்ந்துள்ளார்.
