தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய், அங்கு அஜித்குமாரின் கார் பந்தயத்திலும் கலந்துகொண்டார். செப்டம்பர் 10ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து புறப்பட்ட அவர், மறுநாள் லண்டன் சென்றடைந்தார். சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தய திடலுக்கு சென்ற விஜய், அஜித் பங்கேற்ற மிக்செலின் லீ மான்ஸ் கோப்பை போட்டியை பச்சைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற பந்தயத்தில் அஜித்தின் அணி 38வது இடத்தைப் பிடித்தது.
சில்வர்ஸ்டோனில் அஜித்துடன் இருந்த 2.53 நிமிட வீடியோவை விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பந்தய கார்கள் குறித்து ஏற்பாட்டாளர்கள் மற்றும் வீரர்களிடம் அவர் கேட்டறிவதுடன், அஜித்துடன் இணைந்து ரேஸ் கார் மாதிரியையும் ஓட்டி பார்க்கிறார். அதன்பிறகு ‘ஜோசப் விஜய்’ என்ற பெயர் இடம்பெற்றிருந்த வீரர்களின் பாதுகாப்பு உடையை அணிந்து, அஜித்துடன் ரேஸ் காரில் பயணித்துள்ளார். இருவரும் கைகுலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட நிலையில், கார் மற்றும் பந்தயம் குறித்த தகவல்களை அஜித் அவருக்கு விளக்கியுள்ளார்.
இறுதியாக தேசியக் கொடியை ஏந்தியபடி இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். போட்டியை தொடங்கி வைத்தது, அஜித்தின் கார் பந்தயத்தை உற்சாகப்படுத்தியது, அவருடன் ரேஸ் காரில் பயணித்தது என விஜய்யின் சில்வர்ஸ்டோன் அனுபவங்கள் அனைத்தும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
