சமூக வலைத்தளங்களில் பிரபலங்களைப் பற்றி கருத்து தெரிவிக்கும் போது எல்லை மீறக்கூடாது என நடிகை ஆலியா பட் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், செல்போன் கையில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என சிலர் நினைத்துக் கொள்வதாகவும், குறிப்பாக நடிகைகள் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்து அதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
திரைத்துறையில் இருப்பவர்கள் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு பணியாற்றுவதாக குறிப்பிட்ட ஆலியா, அவர்களை பாராட்ட மனமில்லாவிட்டாலும் அவமதிக்கும் வகையில் பேசாமல் இருப்பது சாத்தியம்தானே என கேள்வி எழுப்பியுள்ளார். நடிகைகளைப் பற்றிய தவறான பேச்சுகளை ரசிக்கும் நபர்கள், அந்த வார்த்தைகளின் அபத்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்ட ஆலியா பட், திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இந்த நிலையில், நடிகைகள் எதிர்கொள்ளும் அவதூறு பேச்சுகள் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன. இனியாவது இதுபோன்ற நபர்கள் தங்களது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என்றும் ஆலியா பட் தெரிவித்துள்ளார்.
