தமிழ் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ‘பிக்பாஸ்’ முக்கிய இடத்தை பிடித்துள்ளது. தமிழில் இதுவரை 9 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல் 7 சீசன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அவர் விலகியதைத் தொடர்ந்து 8 மற்றும் 9-வது சீசன்களை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தார். இதையடுத்து தற்போது 10-வது சீசனுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த புதிய சீசன், நிகழ்ச்சியின் முக்கியமான மைல்கல்லாக அமையவுள்ளது. இதையொட்டி அதிகாரப்பூர்வ கவுண்ட்டவுனும் தொடங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணி முதல் ‘பிக்பாஸ் தமிழ் சீசன் 10’ நிகழ்ச்சியின் பிரம்மாண்ட தொடக்க விழா நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது. ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை, ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் பார்வையாளர்கள் காண முடியும்.
இதனிடையே, பிக்பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கப் போகும் போட்டியாளர்கள் யார் என்ற விவாதம் சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக ஆண் போட்டியாளர்களாக சின்னத்திரை நடிகர் நவீன் குமார், ஆர்யன், வினோத் பாபு, புவியரசு, குரேஷி, பார்கவ் ராம், இன்ஸ்டா பிரபலம் ராஜ்பிரியன், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் மற்றும் திரைப்பட விமர்சகர் பிரசாந்த் உள்ளிட்டோரின் பெயர்கள் பேசப்பட்டு வருகின்றன. எனினும், நிகழ்ச்சி தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை இவை அனைத்தும் எதிர்பார்ப்புகளாகவே பார்க்கப்படுகின்றன.
—
