அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்டி காலனி 3’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இதன் முந்தைய இரண்டு பாகங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்ததால், மூன்றாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மீண்டும் அதே ஹாரர் உலகத்தில் கதை தொடர்வதால் படத்தின் மீதான ஆர்வம் அதிகமாகியுள்ளது.
இதனிடையே, இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகளை ஜீ5 நிறுவனம் சுமார் ரூ.50 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தொகை தமிழ் ஹாரர் திரைப்படங்களின் ஓடிடி விற்பனையில் குறிப்பிடத்தக்க சாதனையாக பார்க்கப்படுவதுடன், இதுவரை அதிக தொகைக்கு விற்பனையான தமிழ் ஹாரர் படமாக ‘டிமான்டி காலனி 3’ அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதலில் இப்படத்தை செப்டம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. அதற்கான அறிவிப்பும் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.சில காரணங்களால் திட்டமிட்ட தேதியில் படத்தை வெளியிடுவதற்குப் பதிலாக அக்டோபர் 1-ம் தேதிக்கு மாற்ற தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த இறுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
