தமிழ் திரையுலகின் மூத்த நடிகைகளில் ஒருவரான சவுகார் ஜானகி, உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 94 வயதான அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
1950-களில் கதாநாயகியாக திரைத்துறையில் அறிமுகமான சவுகார் ஜானகி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள அவர், கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக 2022-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.
ஆந்திராவை பூர்விகமாகக் கொண்ட இவர், 1950-ம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படமான ‘சவுகார்’ மூலம் திரையுலகில் அறிமுகமானார். சுமார் 70 ஆண்டுகள் சினிமாவில் பயணித்த சவுகார் ஜானகி, தமிழில் கடைசியாக சந்தானம் நடிப்பில் 2020-ம் ஆண்டு வெளியான ‘பிஸ்கோத்’ திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படம் அவரது 400-வது படமாக அமைந்தது.
—
