வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ‘வடசென்னை’ படத்தின் யூனிவர்ஸ் பின்னணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.தானு தயாரித்து வருகிறார். வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது.
சென்னையில் நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்ற சிம்புவிடம், எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், சிறு வயது முதலே அரசியலில் தனக்கு ஆர்வம் இருந்ததில்லை என்று தெரிவித்துள்ளார். தனது தந்தை அரசியலில் இருந்தபோது சந்தித்த பல்வேறு பிரச்சினைகளையும், மக்களுக்காக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் எதிர்கொண்ட சிரமங்களையும் அருகிலிருந்து பார்த்ததாக சிம்பு குறிப்பிட்டுள்ளார்.
தந்தை சந்தித்த அந்த கஷ்டங்கள் தன்னை பாதித்ததால் அரசியலுக்குள் செல்லும் எண்ணம் தனக்கு ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில், எதிர்காலத்தில் தனது வாழ்க்கை எந்த திசையில் செல்லும் என்பதை இப்போது உறுதியாக கூற முடியாது என்றும், “காலம்தான் அதற்குப் பதில் சொல்ல வேண்டும்” என்றும் சிம்பு தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் விஜய்யின் ஆட்சி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கும் சிம்பு பதிலளித்துள்ளார். தற்போது அவரது ஆட்சி 100 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுகுறித்து உடனடியாக கருத்து தெரிவிப்பதைவிட இன்னும் சிறிது காலம் பொறுத்திருந்து பார்ப்பதே சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும், தற்போதைய சூழலில் “எங்கள் அண்ணன் நன்றாக செயல்பட்டுக் கொண்டுள்ளார். அண்ணனே தொடரட்டும்” என விஜய்யை குறிப்பிட்டு சிம்பு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
