தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருபவர் ராஷி கன்னா. இயல்பான நடிப்பின் மூலம் தனக்கென ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கியுள்ள அவர், சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து தனது கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகைராஷி கன்னா சமீபத்தில் தெரிவித்த கருத்துகள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன. கனவுகள் என்பது அழகான ஒன்று என்றும், அதை நோக்கி பயணிப்பதும் அதே அளவுக்கு அழகான அனுபவம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல்வேறு தேடல்களைக் கடந்து செல்வதாக கூறிய ராஷி கன்னா, தன்னுடைய ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தேடலுடன் தொடங்குவதாக குறிப்பிட்டார். தனக்கென பல கனவுகள் இருப்பதாகவும், அவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டு அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
வாழ்க்கைப் பாதையில் எதிர்படும் தடைகளை தோல்விகளாக கருத வேண்டியதில்லை என்றும், அவை வெற்றியை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் உந்துசக்திகளாக பார்க்கப்பட வேண்டும் என்றும் ராஷி கன்னா தெரிவித்தார். கனவுகளை நோக்கிய பயணத்தை ஒருபோதும் கைவிட வேண்டாம் என்று அறிவுறுத்திய அவர், குறிப்பாக பெண்கள் எந்தச் சூழ்நிலையிலும் தங்களது கனவுகளை கைவிடக்கூடாது என்றும், முயற்சிகளில் இருந்து பின்வாங்காமல் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
