மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பைசன்’ திரைப்படம் துருவுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற அந்தப் படத்திற்குப் பிறகு, அவரது அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது.
தற்போது, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் நான்காவது தமிழ்த் திரைப்பட தயாரிப்பில் துருவ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார். பிருத்விராஜ் மற்றும் சாய் தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் நடிகர் பட்டியல் குறித்து மேலும் பல அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்னதாக, இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கலாம் என்ற தகவல்கள் பரவியிருந்த நிலையில், தற்போது சந்தோஷ் நாராயணன் அதிகாரப்பூர்வமாக இணைந்திருப்பது உறுதியாகியுள்ளது.
