திரைக்கதை எழுத்தாளராகவும் நடிகராகவும் தனக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ள மணிகண்டன், ‘பீட்சா 2’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு ‘காலா’, ‘ஜெய் பீம்’, ‘குட் நைட்’, ‘லவ்வர்’ உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றார்.
குறிப்பாக ‘குட் நைட்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘குடும்பஸ்தன்’ திரைப்படங்கள் அவரை மக்கள் மத்தியில் மேலும் நெருக்கமாக்கின. சாதாரண மனிதர்களின் வாழ்க்கை, உறவுகள் மற்றும் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தும் அவரது நடிப்பு தொடர்ந்து பாராட்டப்பட்டு வருகிறது.
நடிப்புடன் சேர்த்து எழுத்திலும் ஆர்வம் கொண்ட மணிகண்டன், ‘விக்ரம் வேதா’ படத்திற்கு வசனம் எழுதி கவனம் பெற்றார். மேலும் ‘நரை எழுதும் சுயசரிதம்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.‘குடும்பஸ்தன்’ வெற்றிக்குப் பிறகு அவர் அடுத்ததாக எந்த படத்தில் நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்த நிலையில், தற்போது நீலம் ஸ்டுடியோ மற்றும் பிர்லா ஸ்டுடியோ தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் மணிகண்டன் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
