தமிழ் சினிமாவில் வித்தியாசமான மற்றும் எதார்த்தமான நடிப்பால் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள மைம் கோபி, தற்போது கதாநாயகனாக புதிய பயணத்தை தொடங்குகிறார்.யுவர்பேக்கர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தனது மூன்றாவது திரைப்படத்தில் மைம் கோபி ஹீரோவாக அறிமுகமாகிறார். யுவர்பேக்கர்ஸ் ஓடிடி தளத்திற்காக பல குறும்படங்களை இயக்கி கவனம் பெற்ற இயக்குநர் சந்தோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார்.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமூக விழிப்புணர்வை மையமாகக் கொண்ட இந்தப் படம், வலுவான கருத்துடன் உருவாகும் சமூகத் திரைப்படமாக இருக்குமென கூறப்படுகிறது. படப்பிடிப்பு ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளின் காட்டுப் பகுதிகளில் விரைவில் தொடங்க உள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் கிஷோர் ஆதித்யா கூறுகையில், “பெண்கள் பாதுகாப்பை மையமாகக் கொண்ட கதையை பொறுப்புணர்வுடன் தயாரிக்க விரும்பினோம். பல்வேறு கதாபாத்திரங்களில் தனது திறமையை நிரூபித்த மைம் கோபியை ஹீரோவாக அறிமுகப்படுத்துவது எங்களுக்கு பெருமை” என்றார். படத்தில் இணையும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
