அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘இதயம் முரளி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி தயாரித்துள்ள இப்படத்தில் பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா மற்றும் பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.இந்தப் படத்தில் பகத் பாசில் நடித்த முக்கியக் கதாபாத்திரம் எப்படி உருவானது என்பது குறித்து இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்திய பேட்டியில் சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், அந்தக் கதாபாத்திரத்திற்காக ஆரம்பத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவைத் தேர்வு செய்யவே திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தார். ஆனால் சில காரணங்களால் அது நடைபெறவில்லை. அதன்பிறகு, படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில்தான் பகத் பாசிலை அணுகியதாகவும் கூறினார்.
படத்தின் டிரெய்லரை பார்த்த பகத் பாசிலுக்கு கதை மிகவும் பிடித்துவிட்டதாகவும், ஒரு சில நாட்களிலேயே நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் ஆகாஷ் பாஸ்கரன் தெரிவித்தார். அப்போது அவர் இயக்குநர் ராஜமௌலி இயக்கும் பிரம்மாண்ட திரைப்படத்தில் பிஸியாக இருந்ததால், கிடைத்த ஓய்வு நேரத்தை பயன்படுத்தி நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அவரது காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.
