‘அசுரன்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜெய்கிருஷ்ணா (ஜே.கே.), ‘சாணிக்காயிதம்’, ‘கேப்டன் மில்லர்’, ‘லால் சலாம்’, ‘வா வாத்தியார்’, ‘கர’, ‘கருப்பு’, ‘பிளாஸ்ட்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து கவனம் பெற்றுள்ளார். சமீபத்தில் வெளியான ‘லிங்கம்’ இணையத் தொடரிலும் அவரது நடிப்பு பாராட்டைப் பெற்றது.
இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் திரையுலகில் நுழைந்த ஜெய்கிருஷ்ணா, பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிறகு, விஜய் சேதுபதி நடித்த ‘வன்மம்’ திரைப்படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். பின்னர் ஏற்பட்ட சூழ்நிலைகளால் இயக்கத்தில் தொடர்ந்து பயணிக்க முடியாமல், நடிப்பில் முழு கவனம் செலுத்தத் தொடங்கினார்.
இதுகுறித்து பேசிய அவர், இயக்குநர் வெற்றிமாறன் மூலம் ‘அசுரன்’ படத்தில் நடித்த வாய்ப்பே தனது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்ததாக கூறினார். அந்தப் படத்திற்குப் பிறகு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து, இதுவரை 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தனது வயது மற்றும் தோற்றத்திற்கு வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களே மிகவும் பொருத்தமாக இருப்பதாகவும், அதே பாதையில் தனது பயணத்தை தொடர விரும்புவதாகவும் கூறினார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியது தனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம் என்றும் ஜெய்கிருஷ்ணா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
—
