பாலிவுட்டின் பிரபல ஹாரர்-த்ரில்லர் திரைப்பட வரிசையான ‘ராகினி’யின் மூன்றாம் பாகம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. புதிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவுடன் உருவாகும் இப்படத்தின் கதைக்களத்தை படக்குழு ரகசியமாக வைத்துள்ள நிலையில், படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாகியுள்ள தகவல்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை தமன்னா தற்போது இணைந்துள்ளார். தனது முதல் நாள் படப்பிடிப்பு நினைவாக, ‘Day-01’ என குறிப்பிடப்பட்ட கிளாப் போர்டுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். தமன்னாவுடன் ஆயுஷ் சர்மா, ஜூனைத் கான், நர்கிஸ் பக்ரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முந்தைய ‘ராகினி’ படங்களிலிருந்து மாறுபட்ட கதைக்களத்தில், சூப்பர்நேச்சுரல் ஹாரர் மற்றும் சஸ்பென்ஸ் அம்சங்களுடன் இப்படத்தை ஷஷாங்கா கோஷ் இயக்கி வருகிறார். 2011-ல் வெளியான ‘ராகினி எம்.எம்.எஸ்’ மற்றும் 2014-ல் வெளியான ‘ராகினி எம்.எம்.எஸ் 2’ வெற்றியைத் தொடர்ந்து, இந்த மூன்றாம் பாகம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
—
