முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓ சுகுமாரி’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் வீர் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், பரத் தர்ஷன் கதை எழுதி இயக்கியுள்ளார். கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் மகேஸ்வரா ரெட்டி மூலி தயாரித்துள்ளார்.
காதல், நகைச்சுவை மற்றும் கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், தொட்டாலே மின்சாரம் தாக்கும் விசித்திரமான குணம் கொண்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ளது. அந்த ரகசியத்தை மறைத்து அவளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுவதும், அதன் பிறகு நடைபெறும் சம்பவங்களுமே படத்தின் கலகலப்பான கதைக்களமாக அமைந்துள்ளது. சி.எச். குஷேந்தர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பரத் மஞ்சி ராஜூ இசையமைத்துள்ளார்.
படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், “‘ஓ சுகுமாரி’ முழுக்க முழுக்க கலகலப்பான பொழுதுபோக்கு திரைப்படம். இதுபோன்ற நகைச்சுவை கலந்த கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதே நேரத்தில், ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துகிறேன். ரசிகர்களை மகிழ்விப்பதே என்னுடைய நோக்கம். அதை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன்” என்றார்.
—
