தென்னிந்தியாவின் ‘நைட்டிங்கேல்’ என ரசிகர்களால் வர்ணிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி, வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலப் பிரச்னையால் மைசூரில் காலமானார். அவருக்கு வயது 88. கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ரிபேலே பகுதியில் 1938-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி பிறந்தவர் எஸ். ஜானகி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சமஸ்கிருதம், ஒடியா, துலு, பஞ்சாபி, வங்காளம், கொங்கணி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 40 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார்.
தமிழ் திரையுலகில் 1957-ஆம் ஆண்டு வெளியான ‘விதியின் விளையாட்டு’ திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். தனது நீண்ட இசைப் பயணத்தில் நான்கு முறை தேசிய விருதுகளை வென்றுள்ள அவர், பல்வேறு மாநில அரசுகளின் விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.
தனது தனித்துவமான இனிமையான குரலால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் எஸ். ஜானகி. இந்திய இசைத்துறைக்கு அவர் அளித்த பங்களிப்பு அளவிட முடியாதது. பல ஆயிரக்கணக்கான பாடல்கள் மூலம் இசை ரசிகர்களின் வாழ்வுடன் கலந்த அவரது மறைவு, இந்திய இசைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.
தமிழ் திரையுலகில் கடந்த ஒரு மாதத்தில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ்ஆகியோர் அடுத்தடுத்து காலமானதாகவும், சமீபத்தில் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் மறைந்ததாகவும் கூறப்படும் நிலையில், தற்போது எஸ். ஜானகியின் மறைவுச் செய்தியும் திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
