கன்னட சினிமாவில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்திய நட்சத்திரமாக உயர்ந்துள்ள ராஷ்மிகா மந்தனா, தற்போது வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘மைசா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார்.
இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கும் இந்தப் படத்தில், ராஷ்மிகா பழங்குடியினப் பெண் மற்றும் போர்வீராங்கனையாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் முக்கிய காட்சிகள் மற்றும் அதிரடி சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தயாரிப்பாளர் அஜய் சாய்புரெட்டி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, படத்தின் முக்கியமான நீருக்கடியிலான ஆக்சன் காட்சி படமாக்கப்பட்டு முடிந்துள்ளதாகவும், அந்தக் காட்சிக்காக ராஷ்மிகா சிறப்பு பயிற்சி பெற்று முழு அர்ப்பணிப்புடன் நடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அன்பார்முலா பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார்.
மேலும், ‘புஷ்பா 2’ படத்தில் வில்லனாக கவனம் பெற்ற தாரக் பொன்னப்பாவும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வித்தியாசமான கதைக்களம், புதிய தோற்றம் மற்றும் அதிரடி காட்சிகள் காரணமாக ‘மைசா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
—
