யூடியூப் பிரபலமான பாரத் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தை இயக்குநர் நிரஞ்ஜன் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கும், ஏ.வி.எம். தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்துக்கும் தொடர்பு உள்ளதா என்ற கேள்விக்கு, “அதற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. தலைப்புக்கும், கதைக்கும் மட்டுமே தொடர்பு உள்ளது” என்று இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “முதலில் இந்தப் படத்திற்கு ‘மாஸ்டர் பீஸ்’ என்ற தலைப்பே வைக்கப்பட்டது. ஆனால் அதே பெயரில் கன்னடம் மற்றும் தெலுங்கில் திரைப்படங்கள் இருந்ததால் மாற்று தலைப்பாக ‘மிஸ்டர் பாரத்’ தேர்வு செய்யப்பட்டது. இந்த தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பரிந்துரைத்தார். படக்குழுவினருக்கும் அது மிகவும் பிடித்துவிட்டது. இருப்பினும், ரஜினிகாந்த் நடித்த வெற்றிப் படத்தின் தலைப்பை பயன்படுத்தியதால், ஏ.வி.எம். ஸ்டுடியோஸிடம் இருந்து அதிகாரப்பூர்வ என்.ஓ.சி. பெற்ற பிறகே இந்த தலைப்பு உறுதி செய்யப்பட்டது” என்றார்.
இந்தப் படத்தின் மூலம் ஒரே நேரத்தில் ஆறு புதிய திறமையாளர்கள் அறிமுகமாகின்றனர். பாரத் கதாநாயகனாகவும், சம்யுக்தா விஸ்வநாதன் கதாநாயகியாகவும் அறிமுகமாகின்றனர். இயக்குநராக நிரஞ்ஜன், இசையமைப்பாளராக பிரணவ் முனிராஜ், கலை இயக்குநராக பாவ்னா கோவர்தன், படத்தொகுப்பாளராக திவாகர் டெனிஸ் ஆகியோரும் அறிமுகமாகின்றனர். ‘பிரின்ஸ்’, ‘லவ் டுடே’ உள்ளிட்ட படங்களில் நடித்த பாரத், இதில் பொம்மை தயாரிப்பு நிறுவனத்தில் குவாலிட்டி செக் ஆபீசராக நடித்துள்ளார். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த அவரை தாத்தாவாக நடித்துள்ள ஆர். சுந்தர்ராஜன் வளர்க்கும் கதாபாத்திரம் இடம்பெறுகிறது. கதாநாயகி சம்யுக்தா விஸ்வநாதன், டாய் டிசைனராக நடித்திருப்பதாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
