சமீபத்தில் அர்ஜுன் நடிப்பில் கடந்த மே 28-ம் தேதி வெளியான ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தில், பிரீத்தி முகுந்தன் மற்றும் அபிராமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, பரபரப்பான நடிகையாக வலம் வரும் பிரீத்தி முகுந்தன், அடுத்ததாக அதர்வாவுடன் ‘இதயம் முரளி’ என்ற காதல் கலந்த நகைச்சுவை திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியுள்ள இப்படம் ஜூலை 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், ‘இதயம் முரளி’ படப்பிடிப்பில் பிஸியாக இருந்த காரணத்தால், அட்லி இயக்கும் ‘ராக்கா’ திரைப்படத்தில் நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பை பிரீத்தி முகுந்தன் தவறவிட்டதாக இயக்குநர் அட்லி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “பிரீத்தி முகுந்தன் சிறப்பாக நடிக்கக்கூடியவர். அதேபோல், மிகச் சிறப்பாக நடனமும் ஆடுவார். அதனால்தான் ‘ராக்கா’ படத்தில் அவரை நடிக்க வைக்க திட்டமிட்டேன். ஆனால், ‘இதயம் முரளி’ படப்பிடிப்பில் அவர் பிஸியாக இருந்ததால், நான் கேட்ட தேதிகளை ஒதுக்க முடியவில்லை. அதனால் அவருக்குப் பதிலாக பெமினா ஜார்ஜை அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தோம்” என்றார்.
மேலும், ‘இதயம் முரளி’ படத்திற்குப் பிறகு, தமிழில் ‘தாஷமக்கான்’, தெலுங்கில் ‘எமோ எமோ இடி’, ஹிந்தியில் ‘நாக்ஜில்லா’ உள்ளிட்ட திரைப்படங்களில் பிரீத்தி முகுந்தன் நடித்து வருகிறார்.
—
