தனுஷ் புகைப்படத்துடன் இடம்பெற்ற ரசிகர் மன்றக் கொடியின் படம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் இடம்பெற்றிருந்த “எண்ணம்போல் தான் வாழ்க்கை” என்ற வாசகத்தைத் தொடர்ந்து, தனுஷ் புதிய ரசிகர் மன்றக் கொடியை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், அது அவரது அரசியல் வருகைக்கான அறிகுறி என்றும் பல்வேறு தகவல்கள் பரவின. இந்த விவகாரம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இயக்குநரும், தனுஷ் ரசிகர் மன்றத் தலைவருமான சுப்பிரமணிய சிவா இதுகுறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், “இது புதிய கொடி அல்ல. கடந்த 15 ஆண்டுகளாக திருமணம், காதுகுத்து விழா, திரைப்பட வெளியீடு உள்ளிட்ட ரசிகர் மன்ற நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் அதே கொடிதான்.
இந்த ஆண்டுக்கான ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில், சில ரசிகர்கள் அந்தக் கொடியை கார்களில் பொருத்தும் வகையில் புதிய வடிவில் தயாரித்து கொண்டு வந்தனர். அதை பார்த்த சிலர் புதிய கொடி அறிமுகம் என்றும், தனுஷின் அரசியல் வருகைக்கான முன்னோட்டம் என்றும் தவறாக புரிந்துகொண்டுள்ளனர்” என்று தெரிவித்தார். இதன்மூலம் சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு சுப்பிரமணிய சிவா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ‘திருடா திருடி’, ‘சீடன்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய அவர், தனுஷின் திரைப்பயணத்தில் முக்கிய பங்காற்றிய இயக்குநர்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.
