விவசாயத்தில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஊழல்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘தி இந்தியா ஸ்டோரி’. ஒரு குடும்பத்தின் கதையை மட்டும் கூறாமல், பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் மிகப்பெரிய சமூகப் பிரச்சனையை இப்படம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இதுபோன்ற நிலைமைகளைத் தடுக்க கடுமையான சட்டங்களும், கட்டுப்பாடுகளும் அவசியம் என்பதையும் படம் வலியுறுத்துகிறது.
இந்த திரைப்படம் உருவானதற்கான காரணம் குறித்து தயாரிப்பாளர் சாகர் பி. ஷிண்டே கூறுகையில், “நாட்டின் பல பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போன ஒரு உண்மையை இந்தக் கதை பேசுகிறது. விவசாயத்தில் ரசாயனங்களின் தவறான பயன்பாடு என்பது சுற்றுச்சூழல் பிரச்சனை மட்டுமல்ல; அது மனிதர்களின் வாழ்க்கையையே நேரடியாக பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சனை. இந்தப் படத்தின் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொறுப்புணர்வை வளர்க்கவும் விரும்புகிறோம்.
உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கதை, சுவாரஸ்யமான திரைக்கதையுடன் சமூகப் பொறுப்பையும் சமநிலைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்துறை அலட்சியத்தால் ஏற்படும் விளைவுகளை இந்தப் படம் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதோடு, அதிகாரமிக்க நிறுவனங்களின் பொறுப்புணர்வையும் கேள்விக்குறியாக்குகிறது” என்று தெரிவித்தார். காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே முதல் முறையாக இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. தற்போது ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் ஜூலை 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
