ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, ‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார். சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை நாக வம்சி தயாரித்துள்ளார். இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், நவின் நூலி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் முன்னோட்டம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்றது. இதையடுத்து, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘பட்டாம்பூச்சி’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை பாடகி சுபலக்ஷ்மி பாடியுள்ளார். பாடலின் வரிகளை அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ளார். கதாநாயகியின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குடும்ப உணர்வுகள் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாக உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
