தற்போது இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரணாசி’ திரைப்படத்தில், நடிகர் மகேஷ் பாபு மற்றும் நடிகை பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து ‘கும்பா’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடித்து வருகிறார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இந்த திரைப்படம் இந்திய சினிமாவின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த திரைப்படம் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்திற்கு முன்னதாக, ஹிந்தியில் பிரித்விராஜ் சுகுமாரன் கதாநாயகனாக நடித்துள்ள ‘தாய்ரா’ திரைப்படம் வெளியாக தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தில் அவருடன் பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குற்றப் பின்னணியைக் கொண்ட கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்தது.
தற்போது ‘தாய்ரா’ திரைப்படத்தில் பிரித்விராஜ் சுகுமாரன் தனது கதாபாத்திரத்திற்கான அனைத்து காட்சிகளிலும் நடித்து முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, படக்குழுவினர் வெளியிட்டுள்ள பிஹைண்ட் தி சீன்ஸ் (BTS) வீடியோவின் மூலம் இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். மேலும், ஹிந்தியில் வெளியான ‘தல்வார்’ மற்றும் ‘ராஸி’ போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கிய மேக்னா குல்ஜார் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
