இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் ஆகியோர் இந்தப் படத்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.மேலும், இந்தப் புதிய பாகத்தில் எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்கரவர்த்தி மற்றும் சந்தானம் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், படத்தில் இடம்பெறவிருந்த முக்கிய கேமியோ கதாபாத்திரம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. முதலில் அந்த கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடிப்பார் என கூறப்பட்ட நிலையில், பின்னர் பாலகிருஷ்ணா மற்றும் பவன் கல்யாண் ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக செய்திகள் வெளியானது. சமீபத்தில் ஹ்ரித்திக் ரோஷனும் அந்த கேமியோ கதாபாத்திரத்திற்காக பரிசீலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது படக்குழு புதிய முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, அந்த கேமியோ கதாபாத்திரத்தை முழுமையாக நீக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படத்தொகுப்பு மற்றும் பிற இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், சுமார் அரை நாள் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளதாகவும், அதன் பின்னர் படம் முழுமையாக தயாராகிவிடும் என்றும் கூறப்படுகிறது.
