தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான சிங்கீதம் சீனிவாசராவ், தனது 94வது வயதிலும் இயக்குநராக சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘சிங் கீதம்’. இதில் அயன், அஹல்யா பம்ரு, ஷாலினி கொண்டேபுடி உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இப்படம் குறித்து பேசிய சிங்கீதம் சீனிவாசராவ், இது தனது 40 ஆண்டுகால கனவு திட்டம் என்று தெரிவித்துள்ளார். வார்த்தைகளே பாடல்களாக மாறும் ஒரு தனித்துவமான கதையை பலரிடம் பகிர்ந்ததாகவும், இறுதியாக நாக் அஸ்வின் மற்றும் வைஜயந்தி மூவிஸ் தயாரிப்பில் அதை திரையில் கொண்டுவரும் வாய்ப்பு கிடைத்தது தனது பாக்கியம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், படத்தை தொடக்கம் முதல் இறுதி வரை தானே இயக்கியதாக தெரிவித்த அவர், உலகப் புகழ்பெற்ற இயக்குநரான நாக் அஸ்வின் இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்தது மகிழ்ச்சி அளித்ததாகவும் கூறினார். தன்னை ஒரு தந்தையைப் போல நாக் அஸ்வின் கவனித்துக் கொண்டதாக குறிப்பிட்ட அவர், கமல்ஹாசனுடன் தனக்குள்ள நெருக்கமான நட்புறவு காரணமாகவே அவர் இந்த விழாவில் கலந்துகொண்டது கூடுதல் மகிழ்ச்சியை தந்ததாக தெரிவித்துள்ளார்.
