நடிகை ரைசா வில்சன், சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் ‘நோவா’ திரைப்படத்தின் மூலம் ஆக்ஷன் கதாபாத்திரத்தில் ரசிகர்களை சந்திக்க உள்ளார். இந்த படம் ஒரு கதைக்குள் மற்றொரு கதை சொல்லும் பாணியில் உருவாகியுள்ளதாகவும், தாம் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளதாகவும் ரைசா தெரிவித்துள்ளார்.
ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் அறிவியல் புனைகதை அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் மறையூர் காடுகளில் நடைபெற்றுள்ளது. சந்தன மரங்கள் நிறைந்த அந்த பகுதிகளில் அனுமதி பெறுவதிலிருந்து படப்பிடிப்பு நடத்துவது வரை பல சவால்கள் இருந்ததாக ரைசா கூறியுள்ளார். மழை, பனி, வனவிலங்குகளின் சத்தம், சேறும் சகதியுமான பாதைகள் உள்ளிட்ட கடினமான சூழல்களிலும் படக்குழு பணியாற்றியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ‘நோவா’ படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்காக ராம்போ மாஸ்டரிடம் சிறப்பு பயிற்சி பெற்றதாகவும், ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்திற்காக ஏற்கனவே சண்டைக் காட்சிகளில் பயிற்சி பெற்ற அனுபவம் உதவியாக இருந்ததாகவும் கூறியுள்ளார். அதேசமயம், ஜி.வி. பிரகாஷுடன் நடித்த ‘காதலிக்க யாருமில்லை’ திரைப்படத்தின் 95 சதவீத பணிகள் முடிந்தும் இன்னும் வெளியாகாதது ஏன் என்பது தமக்கே புரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
‘நோவா’ திரைப்படம் ஹாரர், சயின்ஸ் பிக்ஷன், சூப்பர்நேச்சுரல் மற்றும் பேண்டஸி த்ரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ளது. இதில் துருவா, அத்விதி ஷெட்டி, கிருத்திகா பிஸ்வாஸ், ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குநர் மிலோ இயக்கியுள்ளார்.
