இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ திரைப்படத்தில் லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். சாய் இசையமைக்கும் இப்படத்தை அட்லீ தயாரித்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி, தான் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்திருப்பதாகவும், ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.
ரஜினிகாந்த் மீது தனக்கு எப்போதும் மிகுந்த பிரமிப்பு இருப்பதாகக் கூறிய விஜய் சேதுபதி, சமீபத்தில் ‘ஜெயிலர் 2’ படத்திற்காக அவருடன் இணைந்து ஒரு காட்சியில் நடித்ததாக தெரிவித்தார். இருவரும் பேசுவது போன்ற அந்தக் காட்சிக்காக இயக்குநர் நெல்சன், வெற்றிலை, பாக்கு, கிராம்பு உள்ளிட்டவற்றை விஜய் சேதுபதியிடம் கொடுத்து, காட்சிக்கு தேவையான நேரத்தை சரியாக கணக்கிட உதவுமாறு கூறியிருக்கிறார்.
பல ஆண்டுகள் சினிமா அனுபவம் கொண்ட ரஜினிகாந்த், இதுபோன்ற காட்சிக்கு தனியாக ஒத்திகை பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், காட்சியில் தனது வசனம் எவ்வளவு நேரம் செல்கிறது என்பதை கணக்கிட்டு, அதற்கேற்ப வெற்றிலை, பாக்கு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி அவர் பலமுறை ஒத்திகை பார்த்ததாக விஜய் சேதுபதி குறிப்பிட்டார். ஐந்து, ஆறு முறை வரை இதனை செய்து பார்த்த ரஜினியின் இந்த அர்ப்பணிப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் அவர் கூறினார்.
“நானும் சாகும் வரை நடிகராக இருந்தால், அவரைப் போலவே இருக்க வேண்டும்” என்பதே தனது விருப்பம் என்று தெரிவித்த விஜய் சேதுபதி, ரஜினிகாந்த் தனது பணியில் காட்டும் ஈடுபாடு இன்னும் குறையவில்லை என்றும், இன்றும் அவர் சினிமாவை அதே அளவு நேசித்து வருகிறார் என்றும் பாராட்டியுள்ளார்.
